கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே
ஒரு அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆ(யா)ருக்கும் விளங்காததாம்
அதைப்பயந்ததையுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லையாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்பது
விதியொன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலை மூலம் குரூரங்கள்
அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன் நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரைப் பிளந்தபோல் அணுவையும் பிளந்து
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரபிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு(ம்) சக்தியை
மற்றவர் வைபவம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்
ஆகமக் குள(ம்) மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திகச் சலவையும் செய்
கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியிற் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின்
நைவதே நன்றநின் னை.
- கமலஹாசன்
அருமையானக் கவிதை. இருப்பினும் பொழிப்புரை இருந்தால் மிக நன்று. உய்திடும் வழியாக கமல் குறிப்பிடுவது எதை என்று என் சிற்றறிவிற்கு விளங்கவில்லை. தயவு செய்து விளக்கவும். எனக்கும் கவிதை வரும். அது இதோ:
ReplyDeleteஅகந்தை துற
அறிவை சற்று இளைப்பாறச் செய்
எழில் உலகை சுற்றும் பார்
எதற்கு இவையெனக் கேள்வி எழும்
பதில் தேடாது நில்
தேடினால், காணாமலும் போவாய்
மனிதன் படைத்த கடவுள் கூட்டத்தில்;
பகுத்து அறிதல் தேவையாயினும்
வியப்பு அடைதலே ஆறாம் அறிவு.